விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், எந்த விழாவுக்கு வந்தாலும் அந்த வார படங்களின் வசூல் விபரத்தை பகிரங்கமாக போட்டு உடைக்கிறார். பெரும் இமேஜுடன் திரியும் ஹீரோக்கள் இவர் சொல்லும் உண்மைகளால் தவித்துப் போகிறார்கள்.
தனது படத்தின் வசூல் என்ன? எத்தனை பேர் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கிறார்கள்? என்றே தெரியாத, அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத ஹீரோக்கள்தான் “கேரவேன் கொடு, சம்பளத்தை ஏற்று” என்றெல்லாம் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கலைப்புலி சேகரனின் பேச்சும், அவர் சொல்லும் வசூல் விபரங்களும் மறுநாள் செய்திதாள் மூலமாகவாவது நடிகர்களை போய் சேருகிறது. ஒரு வகையில் இது சரியான போக்குதான். ஆனால், அவர் சொல்வது போல “படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆச்சு. பெட்டி பணம் கூட வசூல் ஆகலே. தியேட்டரில் முப்பது பேருதான் படமே பார்க்கிறாங்க” என்ற வார்த்தைகளை கேட்டு, “சேச்சே இந்த படத்துக்கா போகணும்?” என்ற உணர்வு மக்களுக்கும் வந்து தொலைக்கிறதே, அதுதான் வேதனை.
ஒரு புறம் நடிகர்களுக்கு இவரது பேச்சு அறிவுரையாக இருந்தாலும், படத்தை வெளியிடுகிற தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் கூடதான் சேகரனின் பேச்சால் அவதிப்படுகிறார்கள். எனவே புள்ளி விபரத்தை இனிமேலாவது அடக்கி வாசிக்கலாமே? |