வெற்றி சைக்கிள்ல வரும். வேதனை ராக்கெட்ல வரும்னு சொல்வாங்க. இந்த படத்தில் வரும் மன்னாருவின் சுச்சுவேஷனும் அப்படிதான். மன்னாருவாக நடித்திருக்கும் அப்புக்குட்டிக்கு அவர் சைசுக்கு மூளை இருப்பது நன்றாகவே புரிகிறது. இல்லையென்றால் முதல் இரண்டு படங்களின் ஹிட்டுக்கு பிறகு மனிதர் ஆக்ஷனில் இறங்கியிருப்பாரே! இந்த படமும் அழுக்கு அப்புக்குட்டிக்கு சர்வ பொருத்தமான படம்! (தன்னிலை உணர்ந்த தமிழா வாழ்க)
'இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே மன்னாரன்று' என்கிற அளவுக்கு தனது வருங்கால மனைவி வைஷாலியை நேசிக்கிறார் அப்புக்குட்டி. அதே எண்ணத்தோடு சரக்கும் சந்தோஷமுமாக திரியும் இவரை நோக்கி ராக்கெட் வேகத்தில் கிளம்பி வருகிறது வேதனை. ஷகிலா படத்தை ரசித்துவிட்டு அப்படியே ஃபிரண்ட் ரூமில் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு போகலாம் என்று நினைக்கும் அப்புக்குட்டி அதே நண்பனின் திருட்டு கல்யாணத்துக்கு ஜாமீன் கையெழுத்து போட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்.
ஜோடிகளை விரட்டிக்கொண்டு வருகிறது பெற்றோர் மற்றும் அடியாட்கள் கூட்டம். சட்டென்று அப்புக்குட்டியுடன் புதுமனைவியை அனுப்பி வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிறான் நண்பன். ஒரு நாள் இரவு எங்காவது தங்கியாக வேண்டுமே? லாட்ஜில் புருஷன் பெண்டாட்டி என்று சொல்லி ரூம் கேட்கிறார்கள். அங்கு வருகிறது வினை. விஷயம் அப்புக்குட்டியின் மலை கிராமத்துக்கு தெரியவர, வெள்ளந்தி மனதர்களுக்கிடையே வெந்து தணிகிறது இந்த 'ட்ராமா' ஜோடி. தன் காதலன் இன்னொருத்தியுடன் வந்து குடும்பம் நடத்துகிறானே என்று அழுது அரற்றி தற்கொலைக்கு முயல்கிறார் வைஷாலி.
கண்ணெதிரே துடிக்கும் வைஷாலியிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார் அப்புக்குட்டி. இப்படியே நகரும் திரைக்கதையின் முடிவு என்ன? இஞ்சி, வெல்லம், இளஞ்சூடு என்று எல்லாம் கலந்த பிரமாதமான மலை 'டீ'யய்யா இப்படம்.
அப்புக்குட்டி இப்படத்திலும் ஆரவாரப்படுத்துகிறார். ஒரு சுச்சுவேஷனுக்காக கூட 'நாங்க புதுசா கல்யாணமான ஜோடி' என்று சொல்ல அஞ்சும் அவரது நேர்மை அழகு. தான் குத்துக்கல்லாக இருக்கும்போதே வேறொருவன் வைஷாலியை பெண் பார்க்க வருவதை சகிக்க முடியாமல் அவனை துவைத்தெடுப்பதும் கம்பீரம்.
கருப்பு தார் சாலையில் முத்துமாலை கிடப்பதை போல பளிச்சென்று இருக்கிறார் சுவாதி. இவரையும் அப்புக்குட்டியையும் அருகருகே நிற்க வைத்து பார்க்கும்போது நமக்கே சொரேர் என்கிறது. 'நீங்க அவனை படிக்க வச்சிருந்தா அவன் இப்படி ஆகியிருப்பானா?' என்று அப்புக்குட்டிக்கு ஆதரவாக சுவாதி சீறும்போது, கதையை எக்குதப்பா திருப்பி விட்ருவாய்ங்களோ என்ற அச்சமே வந்துவிடுகிறது. நல்லவேளை... அந்த 'சாமி'(?) புண்ணியம்.
அப்புக்குட்டியின் ஆதர்ஷ ஃபிகர் வைஷாலியை ஏன் அவ்வளவு கோரமாக காட்டினார்களோ, அவர்களுக்கே வெளிச்சம். சில ஆங்கிள்கள் 'திடுக்கிட' வைக்கிறது. தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு கதாநாயகியின் குளியல் சீனை கண்டு ரசிகர்கள் நிலைகுலைந்தது இந்த படத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால் இதே வைஷாலியின் நடிப்பு? அற்புதம். அதுவும் அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்து கிணற்றின் மீது ஏறி நிற்கும்போதெல்லாம் ஒரு கிழவி வந்து அதை கெடுப்பது ரசனையான காட்சி.
ஊர் நாட்டாமை தம்பி ராமைய்யாவின் சேட்டைகளை யோசித்து யோசித்து சிரிக்கலாம். அப்புக்குட்டியின் அப்பாவாக நடித்திருக்கும் அந்த நபருக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்.
இந்த படத்தின் ஆகப்பெரிய பலமாக இருப்பது இசைதான். உதயனின் இசையில் எண்பதுகளின் சாயல் அதிகம். அதுவேதான் மயிலிறகாக வருடுகிறது நம்மை. 'ஊரையெல்லாம் காவல் காக்கும்...' பாடலை திரும்ப திரும்ப ஒலிபரப்பி தம்மை கழுவிக்கொள்ளலாம் நம்ம ஊரு எப்.எம்கள். பின்னணி இசையிலும் ஜமாய்த்திருக்கிறார் உதயன்.
அந்த மலைகிராமத்தின் அழகையும் இருட்டின் அடர்த்தியையும் அப்படியே நமக்குள் பதிய வைக்கிறார் ஒளிப்பதிவாளர் அகு அஜ்மல்.
ஆளுதான் புதுமுகம். கதை? கிரைண்டரே தேய்ஞ்சு போன அதே பழைய மாவுதான் என்கிற அளவுக்கு சில பல இயக்குனர்களின் துவக்கம் வெறுப்பை கக்கும். ஆனால் இந்த புதுமுக இயக்குனர் ஜெய்சங்கர் அப்படியெல்லாம் 'உழைக்காமல்' நிஜமாகவே யோசித்திருக்கிறார். பாராட்டுகள்.
மக்கு மன்னாரு... மார்க் எடுத்து வென்றாரு!
-ஆர்.எஸ்.அந்தணன்
|