|
தாயை விட பல மடங்கு வேகமாக குட்டிகள் பாயுற காலம் இது. ஆனால் இது போதும் சொர்க்கம் என்று சின்ன வட்டத்தை விட்டு வெளியே வர மறுக்கிறார் கார்த்திக் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மூத்த வாரிசு.
ஒரு விழாவில் பேசிய இயக்குனர் சிகரம் பாலசந்தர், கார்த்திக் ராஜாவிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கு. அதை அவரு தூக்கி எறிஞ்சுட்டு வெளியே வரணும். அப்படி வந்தாருன்னா அவரு இன்னொரு ராஜா என்றார். இந்த விமர்சனத்தை கார்த்திக்ராஜா எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்? அவரிடம் கேட்டால், அதே வெட்க புன்னகை மாறாமல் பதில் சொல்கிறார்.
அதை எனக்கு சொன்ன அட்வைசா எடுத்துக்கிட்டேன். என்னை நான் மாத்திக்க ட்ரை பண்ணுவேன் என்றார். தம்பி யுவன் நிறைய படங்களுக்கு இசையமைச்சிட்டாரு. ஆனால் அவருக்கு முன்னால திரையுலகில் அறிமுகமான நீங்க மிகவும் சொற்பமாகதான் படங்களுக்கு இசையமைச்சிருக்கீங்க? ஏன் இப்படி? இந்த கேள்விக்கும் அவரிடமிருந்து வருகிற பதில் மெத்தனம் ஸ்கொயர்தான்.
பொதுவா நான் சோம்பேறி. ஆனால் நான் ரொம்ப சந்தோஷமாதான் இருக்கேன். இந்த சந்தோஷம் எனக்கு போதும். இப்படி ஒரு இசைக்குடும்பத்திலே என்னை பிறக்க வச்சு என்னை சுற்றி இசையாகவே இருக்கும்படி பார்த்துகிட்ட ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்றேன் என்றார். |