|
ரெட்டச்சுழி படத்தின் இயக்குனர் தாமிராவும், படக்குழுவினரும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். நானும் ஒரு பத்திரிகையாளன்தான். அதனால் உங்ககிட்ட என்ன பேசறதுன்னு எந்த வித முன்னேற்பாடும் இல்லாம வந்திருக்கேன். நம்ம வாத்தியாருங்கதானேங்கற நம்பிக்கைதான் காரணம். ரொம்ப கேள்வி கேட்டு தவிக்க விட்றாதீங்க என்று உரிமையோடு பேச ஆரம்பித்தார் தாமிரா. ஆனாலும் பளிர் சுளிர் கேள்விகள் பறந்து வந்தன. படப்பிடிப்பின் போது உங்களுக்கும் பாலசந்தர், பாரதிராஜாவுக்கும் பிரச்சனையாமே? இது ஒரு கேள்வி. அவங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது? இது இன்னொரு கேள்வி.
சற்றே முன் நகர்ந்து பேச ஆரம்பித்தார் தாமிரா. "நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலே. ஏன்னா, நான் பாலசந்தர் சாரோட எட்டு வருஷமா இருக்கிறவன். என்னை அவரோட மகன் போலதான் ட்ரீட் பண்ணினார். பாரதிராஜா சார் கூட நான் படம் துவங்குறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியிலிருந்து கூடவே இருக்கேன். அவரோட எல்லா பொதுக்கூட்டங்கள், கண்டன பேரணிகளிலும் கூடவே இருந்திருக்கேன். அதனால் ஷ§ட்டிங் ஸ்பாட்ல அவங்க இரண்டு பேரும் என்கிட்ட அன்பாகவே நடந்துகிட்டாங்க. அவங்களுக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டீங்க. இந்த படத்தில அவங்களோட பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இன்னைக்கு இன்டஸ்ட்ரியில் இருக்கிற 90 சதவீதம் பேர் அவங்களோட சந்ததிகள்தான். அப்படி பட்டவங்களுக்கு எப்படி சம்பளம் நிர்ணயிக்க முடியும்?" என்றார் தாமிரா சாமர்த்தியமாக!
இந்த படத்தில் இரண்டு பேருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பாரதிராஜா ஒரு கம்யூனிசவாதியாகவும், பாலசந்தர் ஒரு காங்கிரஸ் அனுதாபியாகவும் நடிப்பதாக குறிப்பிட்டார் தாமிரா. |