|
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று தைரியமாக எதிர்கொள்ள அவர் என்ன எம்ஜிஆரா? சாதாரண அசின்தானே! கடந்த சில தினங்களுக்கு முன் அசினின் அப்பா ஒரு வழக்கறிஞருடன் நடிகர் சங்கத்திற்கு வந்ததாகவும், அசின் கொடுத்த விளக்கக் கடிதத்தை சங்கத்தில் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய இன்னும் இரண்டு நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அக்கடிதத்தை பிரித்துப் படிக்கிற அதிகாரம் கொண்ட தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் எந்திரன் விழாவுக்காக மலேசியா போயிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்திருக்கும் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், "அசின் விவகாரம் பெரிய சர்ச்சையாகி இருப்பதால் அதனை பிலிம்சேம்பர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்" என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது- "இந்த பிரச்சினை பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒரு வாரத்தில் திரைப்பட கூட்டுக்குழுவை கூட்டும்படி பிலிம்சேம்பர் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்"
"இக்கூட்டுக்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்களின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். கூட்டுக் குழுவில் அசின் பிரச்சினை சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.
தமிழில் நடிக்க தடை விதிப்பதாக இருந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இன்னபிற அமைப்புகளும் கூட போதும். ஆனால் அசின் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதால் அகில இந்திய அளவில் அவரை அடக்குகிற சக்தி உள்ள அமைப்பும் இதில் தலையிட்டால்தான் முடியும். அதனால்தான் பிலிம்சேம்பர் கவனத்திற்கு இதை கொண்டு போயிருக்கிறார்கள். ஆக அசின் விவகாரம், அவர் மன்னிப்பு கேட்டால் கூட எளிதில் முடிகிற விஷயமாக தெரியவில்லை என்பதுதான் இப்போதைய கணிப்பு. |