'தாத்தன் சொல்லி தராததை தம்பி சொல்லிக் கொடுப்பான்' என்று கிராமத்தில் ஒரு சொலவாடை உண்டு. அது த்ரிஷா விஷயத்தில் நிஜம் ஆகியிருக்கிறது. ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த த்ரிஷா பேசிய நாலு வார்த்தையில் ஒரு வார்த்தை கூட தமிழில் இல்லை. அதே மேடையில் அதிர்வேட்டை பற்ற வைத்த விஜய. டி.ராஜேந்தர் 'இந்த த்ரிஷா தமிழ்நாட்டில் வளர்ந்த பொண்ணு. தமிழ் படத்தில் நடிக்கிற பொண்ணு. தமிழில் பேசினால் என்ன? பேச தெரியாவிட்டாலும் பேச முயற்சித்தால்தான் என்ன' என்றார் ஆவேசமாக.
அதன்பின் ஏதாவது விழாவுக்கு த்ரிஷாவை அழைத்தால், 'அந்த தாடி வச்ச ஆளு வரமாட்டாரே?' என்று கேட்ட பின்தான் வரவே சம்மதிப்பாராம். அந்த சம்பவத்திற்கு பின்பும் ஒருமுறை கூட தமிழில் பேச முயற்சி எடுத்துக் கொள்ளாத த்ரிஷா இப்போது கட்டாய தமிழ் கல்வி திட்டத்தில் சேர்ந்திருக்கிறார். காரணம், மர்மயோகி.
இந்த படத்தில் நடிக்கும் அத்தனை பேரும் சொந்தக் குரலில் டப்பிங் பேச வேண்டும் என்று கூறிவிட்டாராம் கமல். படத்தின் கதையும் இந்த நூற்றாண்டை சேர்ந்ததல்ல. அதனால் பேசுகிற தமிழ், தூய தமிழாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம். அதனால் முறையான ஆசிரியர்களை கொண்டு தமிழ் கற்று வருகிறார் த்ரிஷா! மீண்டும் முதல் வரியை படிக்கவும்.
-வலம்புரிநாதன் |