19-ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறவிருக்கும் திரையுலக பேரணிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறது நடிகர் சங்கம். அதே நேரத்தில், இந்த பேரணி சென்னையில் நடத்தப்பட்டால் எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.
நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ராமேஸ்வரம் அழைத்துப் போவது சாத்தியமில்லை என்ற பேச்சு எழுந்திருப்பதற்கு காரணம், இதற்கு முன்பாக நடந்த நெய்வேலி போராட்டம்தானாம். தண்ணீர் தராத கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாரதிராஜா தலைமையில் சென்றது தமிழ் திரையுலகம். சென்னையிலிருந்து நெய்வேலிக்கு புறப்பட்டவர்களுக்கு வழியில் அமைந்துள்ள கல்லூரி வளாகம் ஒன்றில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் விருந்தை ருசி பார்த்தது திரையுலக கலைஞர்கள் அல்ல. அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள்! தனது பலத்தை பிரயோகித்து உள்ளே புகுந்த திருவாளர் பொதுஜனம், எல்லாவற்றையும் சாப்பிட்டு ஏப்பம் விட, பசியோடு நெய்வேலி போய் இறங்கியது திரையுலகம். பலர் தங்கள் கையுடமைகளை தவறவிட்ட பரிதாபமும் நிகழ்ந்தது. நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா சுந்தர் தனது 10 பவுன் பிரேஸ்லெட்டை கூட்டத்தில் தவறவிட்டார்.
இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கதான் சென்னையிலேயே நடத்தலாமே என்றாராம் சரத்குமார். ஆனாலும், ராமேஸ்வரம் போய் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று ஏகமனதாக தீர்மானித்திருக்கிறதாம் நடிகர் சங்கம்.
-கிருஷ் |