ரஜினி நேற்று வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு-
சமீபகாலமாக ரஜினி ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டை மாநிலத்திலும், தமிழ் நாட்டிலும், நடிகர்களின் அரசியல் பிரவேசத்தினால் நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம், எனக்கு நன்றாக புரிகிறது.
தற்போது பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் எந்திரன் படப்பிடிப்பில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள் அவரவர்களுக்கு விருப்பம் உள்ள, கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடி அறிமுகபடுத்துதல், என் படத்தை பயன்படுத்துதல், போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அந்நிலையில் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்பும் இத்தகைய நடவடிக்கைகளை தொடருமானால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தரும் செய்தியோ, அறிக்கையோ பத்திரிகை அன்பர்கள் முடியுமானால் தவிர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இறுதியாகவும் உறுதியாகவும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அரசியலுக்கு நான் வந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது. அந்த நிலைமையில் என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னோடு இணைவதை வரவேற்பேன். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வரதன் |