வெளியூர்களில் இருந்து வந்து, சென்னையில் ஆங்காங்கே உள்ள லாட்ஜ்களில் தங்கியிருந்த ரஜினி ரசிகர்களுக்கு நேற்றைய பிற்பகல் நிலவரம், ‘ச்சும்மா எரியுதில்லே...’ நிலைமைதான்! எந்த நேரத்திலும் ரஜினி, ராகவேந்திரா மண்டபத்துக்கு வருவார். தங்களை சந்திப்பார். கொடிதான், கூட்டம்தான், கோட்டைதான் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்களுக்கு ரஜினியின் அறிக்கையும், அதன் விபரங்களும் தனியார் தொலைக்காட்சிகளில் தெளிவாக சொல்லப்பட, அதிர்ந்தே போனார்கள். இரவோடு இரவாக சென்னையை விட்டு பலரும் கிளம்பிப் போய்விட, சிலர் மட்டுமே அதிர்ச்சி விலகாத முகத்துடன் சென்னையில்!
இந்த பரபரப்பான அறிக்கைக்கு பின்னணியில் நடந்தது என்ன? ரஜினியுடன் ஆரம்ப காலத்திலிருந்தே இருப்பவர் ஒளிப்பதிவாளர் பாபுவின் தம்பி பாபா. இவரது மகளுக்கு ரஜினி தலைமையில் திருமணம். அதுவும் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில். (இந்த மண்டப பொறுப்புகளை கவனித்து வருபவரும் இந்த பாபாதான்) இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட ரஜினி ரசிகர்கள், அவரது வருகைக்காக மண்டபத்தில் கூடியிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் தப்பித்து சென்றுவிடும் ரஜினியிடம் முடிவாக ஒரு பதிலை பெறுவதுதான் ரசிகர்களின் நோக்கம்.
எந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்ப முடிவு செய்த ரஜினிக்கு இந்த தகவல் போய் சேர, உடனடியாக தனது சென்னை ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு பெங்களூருவுக்கு பறந்துவிட்டார். இப்படி ரசிகர்கள் தனக்கு நெருக்கடி கொடுப்பதை ஒரு வித புழுக்கத்தோடு தாங்கிக் கொண்டிருந்தவர், இந்த கல்யாண நேரத்தில் தன்னை மடக்க நினைத்த அவர்களின் முயற்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உடனடியாக அறிக்கை ஒன்றை தயார் செய்தவர் அங்கிருந்தபடியே அதை தனது வீட்டுக்கு பேக்ஸ் அனுப்பியதோடு, எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்ப உத்தரவிட்டாராம்.
விரைவில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்கிறார்கள் ரசிகர்கள். அது என்ன மாதிரி திருப்பம் என்பதுதான் இப்போதைக்கு விடுகதை!
-ஆர்.எஸ்.அந்தணன்
|