முழுக்க முழுக்க கொடைக்கானலில் எடுக்கப்பட்ட படம் கொடைக்கானல். டி.கே.போஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கமல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
பாரதிராஜா பேசும்போது, கமல் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தான். ஏனென்றால் அவ்வளவு சுலபமாக வந்துவிட மாட்டார் அவர். இதுவே உங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றார். தொடர்ந்து பேசும்போது, "அழகான கமலஹாசனை கோவணம் கட்டி பார்த்தவன் நான். அவருடன் நான் ரொம்ப பழகியிருந்தாலும் அவரை வியப்பாக பார்க்கிறேன். இந்த அமானுஷ்ய சக்தி அவருக்குள் எப்படி வந்தது? சிவாஜிக்கு பிறகு தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரே நடிகர் கமல்ஹாசன்தான்" என்றார்.
இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் வி.ஐ.பி கள் படத்திற்கு சம்பந்தமில்லாமல் மேடையிலிருக்கிற வி.ஐ.பி களை வாழ்த்திவிட்டு போவதுதான் வழக்கம். ஆனால், மறக்காமல் படத்தை பற்றியும் பேசினார் பாரதிராஜா. முக்கியமாக இப்படத்தின் இயக்குனர் போசுக்கும் இவருக்கும் இருக்கிற நட்பு குறித்து அவர் பேசியது இன்னும் வியப்பு. இருவரும் ஆரம்ப காலத்தில் ஒரே அறையில் தங்கியிருந்து வாய்ப்பு தேடியவர்களாம். அப்போது போஸ் எழுதிய ஒரு கவிதையை இப்போதும் நினைவில் வைத்திருந்து பாரதிராஜா பேசியபோது பலத்த கைத்தட்டல்!
தசாவதாரம் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களை அதிகம் ஏமாற்றாமல் அப்படம் குறித்தும் கொஞ்சம் பேசினார் கமல். இங்கு பேசியவர்கள் ஆஸ்கர் விருது குறித்து பேசினார்கள். வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து விருது வாங்குவதை பெருமையாக நினைக்க வேண்டும். என் வாழ்நாளில் அதை பார்க்காமல் போக மாட்டேன் என்று கமல் கூறியபோது அரங்கம் அதிர கைதட்டினார்கள் ரசிகர்கள்.
வெளியே வந்த கமல்ஹாசனை மீடியாக்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்க, தாடிக்குள் வெளிப்பட்ட புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு காரில் விர்ர்ர்ரானார் கமல்
-ஆர்.எஸ்.அந்தணன் |